ஒளிமஞ்சள் பூச்சிலே ஓங்காரப் பேச்சிலே

ஒய்யாரி நிற்கின்ற கோலம்

களிதுள்ளும் கண்ணிலே கதைபேசும் போதிலே

கலியெல்லாம் தீர்கின்ற ஜாலம்

கிளிசொல்லும் சொல்லிலே கமலத்தின் கள்ளிலே

கொஞ்சிவரும் பைரவியாள் நாமம்

எளிவந்த அன்பிலே ஏங்கிடும் நெஞ்சிலே

“ஏனெ”ன்று வருகின்ற மாயம்

வீரத்தின் விளைநிலம் வெற்றியின் தாய்மடி
வற்றாத கருணையின் ஊற்று
ஈரத்தின் குளிரென இளங்காலைத் தளிரென
இதயத்தை வருடிடும் காற்று
நேரத்தின் கணங்களாய் காலத்தின் துளிகளாய்
நொடிதோறும் ஒலிக்கின்ற பாட்டு
பாரத்தில் வாடினால் பாதங்கள் தேடினால்
புலனாகும் நம்பிக்கைக் கீற்று
பாஷைகள் எல்லாமும் படைகொண்டு வந்தாலும்
பேசவே முடியாதபெருமை
ஈஷாவின் ஜோதியாய் இலங்கிடும் பைரவி
ஈடேதும் இல்லாத கருணை
தூசாகும் துன்பங்கள் தூளாகும் அச்சங்கள்
துணையாக வருகின்ற மகிமை
ஆசைகள் ஓய்ந்தபின் அனைத்துமே தீர்ந்தபின்
அவள்தானே நமக்கான தனிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *