ஆகாயத்தின் அடுத்த பக்கம்
என்ன நிறமாய் இருக்கக் கூடும்?
வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம்
பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி.
சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக்
காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா?
வெள்ளை நிலவு பட்டுப்பட்டுப்
வெள்ளித் தகடாய்ப் பளபளத்திருக்குமா?
ஏவு கணைகள் ஏதும் வராததால்
தூய வெண்மையில் துலங்கியிருக்குமா?
மேகச் சிராய்ப்புகள் மேலே படாததால்
பூவின் தளிர்போல் புதிதாயிருக்குமா?
வானவில் இங்கே வந்திராமையால்
பாலைவனம் போல் வெறுமையாயிருக்குமா?
எண்ணிலாக் கேள்விகள் என்னுள் கொதிக்கையில்
பறவை ஒன்று பதில் சொல்லிப் போனது.
அனைத்து மனிதரும் அந்தரங்கத்தில்
உறைய விட்டிருக்கும் உண்மையின் நிறமாய்
பதறச் செய்யும் பயங்கர நிறம்தான்
ஆகாயத்தின் அடுத்த பக்கத்திலும்…

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *