ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி விட்டார் போலும். கண் திறப்பதற்குள் அவரைக் காணவில்லை.

பக்தர்கள் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொள்வது பலகாலமாய் உள்ளதுதான். இங்கே ஒரு பெண் உறங்குவதாய் நினைத்து இன்னொருபெண் தோழியருடன் வாயிலில் நின்று எள்ளி நகையாடுகிறாள்.

” சோதிமயமான பரம்பொருளாகிய சிவபெருமான்மேல் உனக்குப் பாசமென்று சொல்வாயே!ஆனால் மலர் தூவிய இந்த மஞ்சத்தின் மீது நேசம் வைத்தாயோ பெண்ணே!” இதுவரை அந்தப் பெண் பேசிய பேச்சு.இனி அந்த வீட்டுப்பெண் பேசுகிறாள்.

“இது கேலி பேசுகிற இடமா? தேவர்கள் தேடித் தொழ கூசும் திருவடிகளை நமக்குத் தந்தருள சிவபெருமான் வந்தருள்வதால் இந்த இடமே சிவலோகமல்லவா!சிற்றம்பலப் பெருமான் மீதான அன்பின் வடிவமே நாமல்லவா” என்க்கிறாள்.திருவெம்பாவையின் இரண்டாம் பாடல் இது.

முந்தைய பாடலிலும் இந்தப் பாடலிலும் அந்தப் பெண் உறங்கும் மஞ்சம், மலர் தூவிய மஞ்சம் என்று வர்ணிக்கப்படுகிறது.தூவப்பட்ட மலர்கள்,போகம் கருதியதல்ல,தனக்கு திருவருள் செய்ய வந்தருளும் சிவபெருமான் திருவடிகளுக்கு தூவுவதற்காக வைக்கப்பட்ட வழிபாட்டு மலர்கள் என்று நமக்குப் புரிகிறது.நெஞ்சத்தில் பக்தி பெருக்கெடுத்தால் மஞ்சத்திலும் சிவவழிபாடு சாத்தியம் என்றல்லவா இந்தத் திருப்பாடல் சொல்கிறது1!
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *