திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண
முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை
ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள்
கேட்க,அவர்களை பழ அடியார் என்றும் தன்னை புத்தடியோம் என்றும் அந்தப் பெண் வர்ணித்து ஆட்கொள்ள
வேண்டுவதாக பொதுவாக உரை சொல்வார்கள்.

“பத்துடையீர்-ஈசன் பழ அடியீர்-பாங்குடையீர்” என்னும் வரி,உள்ளே இருக்கும் பெண் வெளியே நிற்பவர்களை
விளிப்பது போலவும்,”புத்தடியோம்” என்று அவள் தன்னையே சொல்லிக் கொள்வது போலவும் பலர் பொருள்
சொல்வதுண்டு.

ஆனால் இந்தப் பெண்ணின் பக்குவம்தான் பிறரால் புரிந்து கொள்ளப்படவில்லையே தவிர,இவள் எல்லா நேரமும்
சிவ சிந்தையிலேயே ஊறித் திளைப்பவள் என்பதை பிறர் கண்டுகொள்வதாக முந்தைய பாடல்கள் அமைந்துள்ளன.
எனவே இந்தப் பாடலின் முதல் ஐந்து அடிகள் உள்ளே இருப்பவளின் பெருமையை உணர்ந்து வெளியே நிற்பவர்கள்
பாடுவது போலவும்,அடுத்த இரண்டு அடிகளை உள்ளே இருப்பவள் வெளியில் நிற்பவர்களை நோக்கிப் பாடுவது
போலவும் நிறைவு வரியினை எல்லோரும் சேர்ந்து பாடுவது போலவும் பொருள் கொள்வது மேலும் பொருத்தமாய்
இருக்கிறது.

“முத்தன்ன வெண்நகையாய்” என்னும் தொடக்கம் தனிச்சிறப்புடையது. நல்லூர்ப் பெருமணத்தின் போது
திருஞானசம்பந்தர் முழுவதும் முத்திலேயே அலங்கரிக்கப்படுவார். இதற்கு உரையெழுதிய சிவக்கவிமணி
சி.கே.எஸ்.,அனைவருக்கும் முத்தி அருள வந்தவருக்கு முத்தலங்காரம் என்பார். அதுபோல் இப்பெண்ணின்
நகையானது முத்தியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

முதல் மூன்று வரிகளில் உரிமை பற்றி ஒருமையில் அழைக்கும் பெண்கள், அந்தப் பெண்ணின் பக்குவத்தை
நினைந்து நான்காம் வரியில் ‘அர்’ விகுதியிட்டு அழைக்கத் தொடங்குகின்றனர்.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

வெளியே நிற்கும் தோழியர் அனைவரும் தங்களை “புத்தடியோம்” என்று ஒருங்கே குறிக்கின்றனர்.
சித்தம் அழகிய பெண்ணாகிய் நீ சிவனைப் பாடுவதையும் நாங்கள் கேட்க வேண்டும்” என்று விண்ணப்பிக்கின்றனர்.
புத்தடியாராலும் பழ அடியாராலும் தீவிரமாக விரும்பப்படுபவன் என்பதனால் ‘நம் சிவன்” என்னும் பாங்கும்
நினையத்தக்கது.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *