மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது. தானெனும் தன்மையை அனைத்திலும் ஊடாட விட்டு அவற்றை தன்னிலிருந்து தனியாகவும் காட்டுகிறான் இறைவன்.

அதுமட்டுமா?அனைத்திலும் தன் இருப்பை காட்டவும் செய்கிறான்.கண்ணாரக் காணும்படி காட்டுகிறான். ஒளிபொருந்திய மகுடங்களை சூடிய தேவர்கள் சிவபெருமானின் திருவடிகளைப் பணிய நெருங்கும் போது, அவன் திருவடிகளின் பேரொளியில் இவர்களின் மகுடங்கள் ஒளியிழப்பது போல,கதிர் வந்து இருளை மறைக்கையில் நட்சத்திரங்கள் ஒளியிழக்கின்றன.

இதேநேரம் பிரபஞ்சமெங்கும் ஒளியாய் இருளாய் பெண்ணாய் ஆணாய் அலியாய் பிறவாய் விளங்குபவனும் சிவனே, அவற்றிலிருந்து தனியே துலங்குபவனும் சிவனே என்பது புலனாகிறது.


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *