எழுதித் தீராக் கணங்களை எல்லாம்
எப்படித் தாண்டுவது
எழுத்தில் சேராக் கணங்களை எல்லாம்
எங்கே தொடங்குவது
பழுதாய்ப் போன பழைய கணங்களை
எங்கே வீசுவது
முழுதாய் வாழ மறந்த கணங்களை
எங்கே தேடுவது
கணையொன்று வில்லைக் கடக்கும் கணத்தின்
கணக்கெங்கு காணுவதோ
இணைப்பறவைகளில் ஒன்றை வீழ்த்தும்
நொடியெங்கு தோன்றியதோ
அணையினைக் கண்ணீர் தாண்டி நடக்கும்
அபூர்வ கணமெதுவோ
கணங்களில் நடக்கும் காலத்தின் கால்களில்
துணைமுள் குத்தியதோ
ஒவ்வொரு நொடியையும் உள்ளே வாங்கி
உயிரில் சேமித்தேன்
கவ்வி இழுக்கும் கவலையை மகிழ்வை
கணக்கில் காண்பித்தேன்
 எவ்விதம் வாழ்க்கை இருந்த போதிலும்
இருப்பை நேசித்தேன்
இவ்விதம் வாழ்ந்திட என்னைப் பணித்த
இறைவனை நேசித்தேன்
நடக்கும் கணம்மேல் நிலைகொண்டு நின்றால்
நகர்வதும் ஒருயுகமே
கடக்கும் முகிலாய் காணத் தெரிந்தால்
கவலையும் ஒருசுகமே
தொடக்கமும் முடிவும் தெரியா நதியெனத்
தொடர்வது காலமன்றோ
முடிக்க முடியாக் கோலம் வரைபவை
மாயையின் விரல்களன்றோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *