குளத்தைப் பார்க்கும்போதெல்லாம், குளிக்க முடியாவிட்டாலும்கூட, ஒரு கல்லையாவது வீசியெறிய வேண்டுமென்று கைகள் பரபரக்கும். இந்த உந்துதல் ஏற்படுவதற்கு, உளவியல் அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. எங்காவது ஏதாவதொரு சலனத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்கிற உணர்வில் பிறக்கும் செயல் இது.

ஒரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பள்ளி மாணவராக இருந்தபோது, பாட்டுப்போட்டியில் அவருடன் எத்தனையோ மாணவர்கள் போட்டி போட்டிருப்பார்கள். ஒரு சில போட்டிகளில் ஒரு சிலர் ஜெயித்திருப்பார்கள். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

தங்களுக்குப் பிரியமான இசைத்துறைக்குள் முழுநேரமாக நுழைவது வாழ்க்கைக்குப் பாதுகாப்பான விஷயமா என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கலாம், வேறொரு துறையில் வேலை பார்த்தோ, பிரியமான இசையிலேயே தன்னை முழுவதாகக் கரைத்துக் கொண்டு, அதன் மூலம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்ததுடன் மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ள எஸ்.பி.பி. இன்று பெற்றிருக்கும் இடத்துடன் அவர்களை ஒப்பிட முடியுமா?

இசை என்கிற நீர்நிலையில், கற்களை எறிந்து, அதன் மூலம் சில வட்டங்களைக் கிளப்பியதோடு தங்கள் விருப்பத்தை விட்டுவிட்டவர்கள் நடுவே, இசையுலகில் ஓர் அலையாக எழுந்து ஓடியாடிக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி. ஓர் உதாரணம்தான்.

இதையே விஸ்வநாதன் ஆனந்த்தின் சின்ன வயது சதுரங்க சகாக்கள், சானியா மிர்ஸாவின் சிறுவயது டென்னிஸ் தோழிகள் என்று பலரோடும் பொருந்திப் பார்த்துக் கொண்டே போகலாம்.
உங்களிடம் சில உயர்ந்த திறமைகள் இருக்கலாம். அந்தத் திறமைகளைக் கொண்டு வட்டங்களைக் கிளப்பப் போகிறீர்களா அல்லது அலைகளை எழுப்பப்போகிறீர்களா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

முழு ஈடுபாட்டை எதில் காட்டினாலும் அதில் தொடர்ச்சியாய் உச்சங்களைத் தொடுவதும் தவிர்க்க முடியாத சக்தியாய் வளர்வதும் சாத்தியம். அதற்கான தீவிரம்தான் அடிப்படைக் கேள்வி.

முழு ஈடுபாட்டை எதில் காட்டினாலும் அதில் தொடர்ச்சியாய் உச்சங்களைத் தொடுவதும் தவிர்க்க முடியாத சக்தியாய் வளர்வதும் சாத்தியம். அதற்கான தீவிரம்தான் சாதனைக்குப் பாதை வகுக்கிறது. ஒரு துறையில் போதிய ஆர்வம் இருந்தால் ஆழம் தானாக வரும்.

மனிதன் தனக்கிருக்கும் ஆற்றலை நிரந்தர வைப்பில் வைத்துவிட்டு, அதன் வட்டியான 10% மட்டும் வாழ்க்கைக்குப் போதும் என்று முடிவு கட்டிவிடுவதால் வருகிற சிக்கல் இது.

செல்வம் சேமிப்பதற்கு. ஆற்றல் செலவிடுவதற்கு. இந்த அடிப்படையைப் பலரும் மனதில் கொள்வதில்லை. நீங்கள் உங்களுக்குத் திறமை இருக்கும் துறையில் எத்தகை தீவிரத்துடன் ஈடுபடுகிறீர்கள் என்பதே முக்கியம். அதற்கான சக்தியும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பிலேயே தரப்படுகிறது.

மனித மனதுக்கு என்னவெல்லாம் சாத்தியம் என்கிற பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

கவனத்தைக் குவித்துக் கேட்கிறபோது, நூறு இலக்கங்கள் கொண்ட நீ…ண்ட எண்ணை ஒரு தடவை கேட்டுவிட்டுத் திரும்பச் சொல்ல மனிதனால் முடியும். இருபதே நிமிஷங்களில் நூறு பேர்களை சந்தித்துவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் பெயரையும் திருப்பிச் சொல்ல மனிதனால் முடியும்.
இப்படி எத்தனையோ “முடியும்” நம் பட்டியலில் இருக்கிறது. ஆங்கிலத்தில் “Professional” என்றொரு வார்த்தை உண்டு. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைத்தான் பொதுவாக புரொபஷனல் கல்வி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒரு துறையில் ஒருவர் விடாமல் பத்துவருடங்கள் முயல்கிறார் என்றால் அவர் புரொபஷனல் என்பதே முக்கியம்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி. வட்டங்களைக் கிளப்புவதோடு நின்றுவிடாதீர்கள். அலைகளை எழுப்புங்கள். தவிர்க்க முடியாத ஆளுமையாய் வளருங்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *