மார்க்கெட்டிங் என்ற சொல்லின் உட்பொருளை விரிவுபடுத்திக்கொண்டே போனால் அதன் அடிநாதம், நம்பிக்கையைப் பெறுவதுதான். இந்த உலகம் யாரை நம்புகிறது ஏன்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இதில் அடுத்தடுத்த படிகளை வெகு சுலபமாகக் கடந்து விடலாம்.

தனித்தன்மை உள்ளவர்களை உலகம் நம்புகிறது. தனித்தன்மையை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களையெல்லாம் உலகம் நம்புகிறது.

இந்தியச் சூழலில் ஒரு மனிதருக்கு ஒவ்வொரு வாரமும் 56 மணிநேரங்கள் வேலையில் கழிகின்றன. மேலும் 10 மணி நேரங்கள் வேலை சார்ந்த பயணங்களில் கழிகின்றன. இது தவிர குடும்பம், உறவு, நட்பு என்று தயாரிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, நம்பி, இதை வாங்குவதென்று தீர்மானிப்பதற்கு காலதாமதம் ஆகும். வெளியிலிருந்து உந்துதல் இன்றி இந்த முடிவை தள்ளிப் போடவே செய்வார்கள். உயிர் காக்கும் மருந்தையோ உடனடி அத்தியாவசியப் பொருளையோ வாங்குகிற சூழல்கள் மட்டும் விதிவிலக்கு.

ஒரு தயாரிப்பின் தனித்தன்மையை நினைவுபடுத்துவதும் வலியுறுத்துவதும் வெளிப்படுத்துவதும் மார்க்கெட்டிங்கின் மிக முக்கியக் கடமைகள். ஒரு டியூப் லைட் வாங்க வேண்டுமே என்ற உண்ணம் ஏற்பட்ட அடுத்த விநாடி எந்த டியூப் லைட் வாங்குவது என்கிற கேள்வியே இல்லாமல், குறிப்பிட்ட தயாரிப்பின் பெயர் ஒருவருக்கு நினைவுக்கு வர வேண்டும். (இவரே ஒரு டியூப் லைட்டாக இருந்தாலும்கூட நினைவுக்கு வர வேண்டும்) இந்த அளவுக்கு சந்தை மதிப்பையும் தாண்டி வாடிக்கையாளர்களின் சிந்தை மதிப்பை ஓரு தயாரிப்பு பெறுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவூட்டல்கள் ஆவசியம்.

இரண்டாவதாக போட்டித் தயாரிப்பாளின் தயாரிப்பைக் காட்டிலும் தங்களின் தனித் தன்மை என்ன என்பதை வாடிக்கையாளர்கள் மத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்த வேண்டும். “இதுவும் டியூப் லைட். அதுவும் டியூப்லைட். என்ன பெரிய வித்தியாசம்” என்கிற கேள்வி எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல.

ஒரு தனிமனிதனில் தொடங்கி தயாரிப்பு வரை தனித்தன்மையால் மட்டுமே நினைவில் நிற்க முடியும். மற்றவர்கள் நம்பும் விதமாக தரத்தின் பெயராலும் சேவையின் பெயராலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் விபரங்கள் முதலில் பார்க்கப்படுகின்றன. பிறகு கவனிக்கப் படுகின்றன. பிறகு, “முயற்சித்துப் பார்க்கலாமே” என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

மூன்றாவது கட்டம், வெளிப்படுத்துவது. ஒரு தயாரிப்பின் தன்மை பயன்படுத்திப் பார்க்கும் போதுதான் வெளிப்படுகிறது. “மார்க்கெட்டிங் உத்திகள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு, பயன்படுத்திப்பார்க்கும் அனுபவத்துடன் ஒத்துப்போகும் வேளையில் வாடிக்கையாளருக்கு ஏற்படும் மனநிறைவு. உண்மையில் இது முதல்படி மட்டுமே!!

வாடிக்கையாளரை நம்ப வைப்பதுடன் நில்லாமல் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் இவருக்கிருக்கும் முழுமையான அனுபவம் இதிலே முக்கியம். மார்க்கெட்டிங் பிரிவின் வேலைகளில் நேரடிப் பங்குதாரர்கள் விளம்பர நிபுணர்கள். விளம்பர உலகின் மிக முக்கிய நிபுணரான டேவிட் ஒகில்வி, தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய தயாரிப்புகளைப் பயன்படுத்துவது என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தார். எந்தத் தயாரிப்பையும் நுகர்வோர் கண்ணோட்டத்திலிருந்து அணுகும்போதே இதன் குறை நிறைகள் புரியும்.

வாடிக்கையாளர்களின் புகார்கள் எல்லாமே குறை சொல்லும் கண்ணோட்டத்துடன் சொல்லப்படுபவை அல்ல. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் தங்கள் மீதான விமர்சனங்களை மறுத்து தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் அணுகுமுறை புரிந்து கொள்ளக்கூடியதே தவிர நியாயப்படுத்தக்கூடியது ஆல்ல.

ஓர் உதாரணம். பெரிய நிறுவனங்களுக்கு உள்நிலை தணிக்கையாளர்கள் உண்டு. Internal Auditors என்றழைக்கப்படும் இவர்கள், வெளியிலிருந்து வரும் தணிக்கையாளர்கள் போலவே கண்டிப்புடன் தணிக்கையில் ஈடுபடுவார்கள். இத்தகையை உள்நிலை தணிக்கையாளரின் அணுகுமுறையுடன் தரம், சேவை ஆகிய தன்மைகளை கண்காணிக்கும் பொறுப்பு மார்க்கெட்டிங் அலுவலருக்கு உண்டு. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். வரவேற்பு அலுவலர்கள் தொடங்கி ஒவ்வொரு பிரிவினரின் அணுகுமுறையிலும் மார்க்கெட்டிங் மனோபாவம் இருந்தால் இதுவே நிறுவனத்தின் வெற்றி. ஏனென்றால் மார்க்கெட்டிங் என்பது விற்பனை சம்பந்தப்பட்டதல்ல. உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் தங்கள் தயாரிப்புக்கும் மக்கள் மனங்களுக்கும் நடுவே உறவுப்பாலம் உருவாக்குவதே மார்க்கெட்டிங்.

தந்த உத்திரவாதத்தை தக்க வைத்துக் கொள்வதும், சேவை மதிப்பை அதிகரிப்பதும் போட்டியாளர்களைப் புறந்தள்ளிப் புதுமைகள் படைப்பதுமே மார்க்கெட்டிங் மந்திரங்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *