கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2010 ம் ஆண்டுக்கான  விருதுகள்  கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கும், அமரர்  சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்  புதல்வர்  டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கும்  வழங்கப்படுகிறது. இது அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவள விழா ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. கவியரசு கண்ணதாசனின் தீவிர ரசிகரன திரு.கிருஷ்ணகுமார் இந்த விருதினை நிறுவி ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.

            (கல்யாண்ஜி)                                           (டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம்)

கோவை பாரதீய வித்யா பவன் கலையரங்கில் 2010 ஜூலை 11 அன்று நிகழும்  இந்த விழாவில் கோவை பண்ணாரி அம்மன் குழு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்று இந்த விருதுகளை வழங்குகிறார். முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பாராட்டிப் பேசுகிறார்.

முன்னதாக காலை 10 மணிக்கு மரபின்மைந்தன் முத்தையா எழுதிய “கண்ணதாசன் ஒரு காலப் பெட்டகம் என்ற நூல் வெளியிடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.ம.கிருஷ்ணன் நூலை வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமதி சரஸ்வதி கண்ணையன் முதல்படி பெறுகிறார்.இசைக்கவி ரமணன் கண்ணதாசன் குறித்து கவிதை வாசிக்கிறார்.

தொடர்ந்து முனைவர்.கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமண்டபம்
நடைபெறுகிறது. கவியரசு கண்ணதாசனின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் சந்தோஷ கானங்களா?வாழ்வியல் ஞானங்களா? என்ற இந்த பட்டிமண்டபத்தில், ஆத்தூர் சுந்தரம், புலவர் இராம குப்புலிங்கம், செல்வி கனகலட்சுமி, கவிஞர் மீ.உமாமகேஸ்வரி, திருமதி மகேஸ்வரி சற்குரு, திரு.
இளங்கோவன் ஆகியோர் வாதிடுகின்றனர்

Comments

  1. நீங்கள் சென்னை வரும்போது சந்திக்கமுடியாது. நாளை பெங்களூர் போகிறேன்.

    விழா இனிதே நடைபெற என் வாழ்த்துகள்!

    பாரதி மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *