ஒரு குழந்தைக்கு, தன்னைப்பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.

அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா? இன்னும் படுக்கையை நனைக்கிறதா? சொன்னதைக் கேட்க மறுக்கிறதா? சொல்வது காதில் விழுவதே இல்லையா? விருந்தினர் வந்தால் எழுந்து உள்ளே போய்விடுகிறதா? சகஜ பாவமில்லாமல் சங்கோஜ மாய் வளர்கிறதா? இத்தனை இருந்தாலும்….நம்புங்கள்? உங்கள் குழந்தையும் சாதிக்கும். படிப்படியாய் சில முயற்சிகளை மிக இயல்பாகவும் நிதானமாகவும் வீட்டில் நாம் எடுத்தால்போதும். ஒரு தாவரம் துளிர்விட்டுத் தளிர்விட்டு வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பது போல் குழந்தையின் வளர்ச்சியைக் காண முடியும்.

முதலாவதாக, தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பம் – பாரம்பரியம் குறித்தெல்லாம் குழந்தைகள் தெரிந்துகொள்வது முக்கியம். பணத்தை மையப்படுத்தியே வாழ்வதாய் கருதப்படுகிற மேலை நாடுகளில்கூட FAMILY TREE என்று தங்கள் வேர்களைத் தேடும் வேலையில் இளைய தலைமுறை இறங்கியிருக்கிறது.

தாத்தா பாட்டி – அவர்களுக்கும் முந்தைய தலைமுறை – அவர்கள் செய்துவந்த தொழில்& அவர்களுடைய ஆளுமை – அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் போன்றவை குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு உற்சாகமாக சொல்லுங்கள். தன்னுடைய பரம்பரை குறித்த அறிவு மனதுக்குள் மிகுந்த நம்பிக்கைய வளர்க்கும். ஒரு வேளை முன்னோர்கள் சிரமப்பட்டு உயர்ந்திருந்தால்கூட அவர்கள் கதையே ஒரு முன்னுதாரணமாய் அந்த இளம் இதயங்களில் நிலைக்கும். கடந்த கால உறவுகள் பற்றிய தகவல்களும், நிகழ்வுகால உறவுகள் உடனான நேரடி அறிமுகமும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். “எங்கே சார்! உறவுகள் வந்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்! என்று நீங்கள் கேட்கலாம்.

கோவையில், ‘சிகரம் உங்கள் உயரம்’ அமைப்பின் கிளை அமைப்பாகிய வளரும் சிகரங்கள்’ குழந்தைகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இதே பிரச்சினையை அவர்கள் முன் வைத்தேன். 27 குழந்தைகளில் பெரும்பாலானவை சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது.

“என்னுடன் இவ்வளவு கலகலப்பாகப் பேசுகிறீர்களே! உறவினர்கள் வந்தால் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?” என்பது நான் கேட்ட கேள்வி. அதற்குக் குழந்தைகள் சொன்ன பதில், “நீங்கள் எங்ககிட்டே ஃபிரண்ட் மாதிரி பேசறீங்க அங்க்கிள்! அவங்க எங்களை அதிகாரமா, “நான் பெரியவன்! தெரிஞ்சுக்கோ”ங்கிற தொனியிலே பேசறாங்க. எங்க அப்பா அம்மாவும் எங்களை அறிமுகப்படுத்தக் கூப்பிடும் போதே நாய்க்குட்டியைக் கூப்பிடற மாதிரி கூப்பிடறாங்க”.

இதுதான் விஷயம். இதுவேதான் விஷயம். குழந்தைகள், தங்களை உரிய மன முதிர்ச்சியுடன் நடத்த வேண்டும் என்று ஓரளவு விவரம் வந்த பிறகு விரும்புவது இயற்கை. இது நியாயமும் கூட நாம் பச்சைக் குழந்தைகளைக் கொஞ்சும்போது அவர்கள் மொழியில் பேச ஆசைப்பட்டு “அப்புக்கண்ணா! புஜ்ஜீக்குட்டி” என்று கொஞ்சுகிறோம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளிடம் நாம் பெரியவர்கள் என்ற வீராப்பைக் காண்பிக்கப் படாதபாடுபடுவோம்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *