நீங்கள் எந்த வேலை பார்ப்பவராய் இருந்தால் என்ன? நீங்கள் எந்த வயதில் இருந்தால் என்ன? நீங்கள் எங்கு வசிப்பவராய் இருந்தாலும் என்ன? உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்கிறதா என்று முதலில் உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியம்! அதற்கு எமர்சன் தருகிற எளிய அளவுகோல்கள் இங்கே!

அடிக்கடி சிரித்து மகிழும் வாய்ப்பை நீங்கள் விரும்பி ஏற்றால், அறிவாளிகளின் மதிப்புக்கும் குழந்தைகளின் அன்புக்கும் நீங்கள் ஆளாகியிருந்தால், உங்களை விமர்சிப்பவர்களும் மதிக்கும் விதமாய் உங்கள் செயல்திறன் அமைந்தால், போலி நண்பர்களின் துரோகத்தைத் தாங்கும் வலிமை உங்களிடம் இருந்தால், அழகை ரசிக்கவும், அடுத்தவர்களின் சிறப்பம்சங்களை அறிந்து வெளிப்படுத்தத் தெரிந்தால், உங்கள் செயல்களால், இந்த உலகத்தை உங்களால் அழகாக்க முடிந்தால், உங்களால், ஒருவர் வாழ்விலாவது உயர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தால்… நீங்கள் வெற்றியாளர்.. என்கிறார் எமர்சன்.

ஒரு மனிதன், தன் துறையில் மட்டும் கவனம் செலுத்தி அதில் வருகிற ஆதாயங்களை மட்டும் அளவுகோலாக்குவது முழுமையான வெற்றி அல்ல. ஆனால் அது முழுமையான வெற்றி நோக்கிய முதலடி. எந்த மனிதனிடம் வெற்றியின் விளைவாக மனம் கனிகிறதோ, எந்த மனிதனிடம் வெற்றியின் விளைவாக பணிவு மலர்கிறதோ, எந்த மனிதனிடம், தன் வெற்றியின் ஒரு பகுதி கொண்டு, மற்றவர்களின் துயரம் துடைக்க எண்ணம் வளர்கிறதோ, அந்த மனிதனே பன்முக வெற்றியை நெருங்குவதோடு, இன்னும் பல மடங்கு வெற்றிகளை நோக்கிப் பயணம் செய்கிறான் என்று பொருள். வெற்றியின் அளவுகோல்களைப் பொறுத்து, வெற்றியின் அளவும் மாறுகிறது. ஆமாம்! எமர்சனின் பட்டியலில் உள்ள குணங்களை இயல்புகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றியின் விஸ்வரூபத்தை விரைவில் காண்பீர்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *