முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)
1 Comment/in 2011, Blog /by jbadminஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி
காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி
நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி
பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும் புலமை அபிராமி
தொட்டது துலங்க துணையென நிற்கும் கருணை அபிராமி
கெட்டவர் நடுங்க கீழ்மைகள் களையும் கடுமை அபிராமி
முட்டிய கன்றின் இதழ்தொடும் அமுதின் முதல்துளி அபிராமி
ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவாய் உதிப்பவள் அபிராமி
உன்னிய நெஞ்சில் ஓமெனும் மந்திரம் பதிப்பவள் அபிராமி
மன்னிய வினைகள் முழுவதும் வீழ்ந்திட விதிப்பவள் அபிராமி
சந்நிதி வரச்சொல்லி சித்துகள் நிகழ்த்தி சிரிப்பவள் அபிராமி
அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி
அவளே அறிவாள் (நவராத்திரி 1)
0 Comments/in 2011, Blog /by jbadminசொல்லவா… சொல்லவா… வெண்ணிலாவே!
0 Comments/in 2011, Blog /by jbadminதொடர்புடைய சுட்டி :
குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு
மனிதம் வாழ்க!
1 Comment/in 2011, Blog /by jbadminஆதி சிவனின் அரசாங்கம்
1 Comment/in 2011, Blog /by jbadmin(நீயே சொல் குருநாதா – கவிதை தொகுப்பிலிருந்து….)
(ஈஷா யோகா நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ ராம் பரசுராம் அவர்களால் இந்த பாடல் பாடப்பெற்றது…பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)
செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்
4 Comments/in 2011, Blog /by jbadmin![]() |
Sadguru |
சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்
சரணம் 1
நன்மை பயக்கும் எனின்…..
1 Comment/in 2011, Blog /by jbadmin“பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்” செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.
கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக “கல்கி” வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.
அவர் எதிரே இருந்த டீப்பாயில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது மைசூர்பா பெட்டி.திறந்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பாட்டில் பெப்ஸி. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய கல்கி நூற்றாண்டு விழாவில்தான் இந்த அமர்க்களம்.
விழாவிற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வாணவராயர். அன்றும் இன்றும் இளைஞர்களின் ஆதர்சம்சிறப்புப் பேச்சாளர்கள் வரிசையிலோ ஒரு விசித்திரமான கூட்டணி. பாலகுமாரன், சோ, கலை விமர்சகர் சுப்புடு.
விழாவில் இறைவணக்கம் பாட வேண்டியவர் எதனாலோ வரவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் சுப்புடுவை கலாய்த்துக் கொண்டிருந்தார். “சார்! நீங்க மேடையிலே இருக்கீங்கன்னதும் இறைவணக்கம் பாடக்கூட ஆளைக் காணோம்”.
கொஞ்ச நேரத்தில் ஏதோ வேலையாக வெளியே வந்த என்னை தயங்கித் தயங்கி அணுகினார் அந்தப் பெரியவர்.”சார்! வணக்கம்.” ஏறிட்டுப் பார்த்தேன். பரிச்சயமான முகம்தான். வயது எழுபது இருக்கும். பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.”வணக்கம்! சொல்லுங்க சார்” என்றேன். கூடுதல் தயக்கத்துடன் கேட்டார்… “இல்லை ! நான் நல்லா பாடுவேன் சார். இந்த விழாவிலே இறைவணக்கம் பாட சான்ஸ் கிடைக்குமா?”
இறை வணக்கம் பாட வேண்டியவர் வராமல் போன விஷயம் இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகஸ்மாத்தாக அகப்பட்டார். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “கிருஷ்ணன் சாரைக் கேட்டு சொல்றேன்” என்று நகர்ந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து கேசட் போட்டுவிடலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு அவரைப் பாடச் சொல்வதென்று
முடிவெடுத்தோம்.
![]() |
“கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” கிருஷ்ணன் |
சுமாரான குரல். பாட அழைக்கப்பட்ட போதும், பாடி முடித்த பிறகும் “ரொம்ப நன்றி சார்!” என்று வெவ்வேறு பாவங்களில் சொன்னார். சுப்புடு கையாலேயே அவருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் கொடுத்ததில் புளகாங்கிதம் அடைந்தார் மனிதர். மேடையின் ஓரத்தில் இருந்த என்னிடம் “ரொம்ப சந்தோஷம் சார்! ரொம்ப நன்றி சார்” என்று பலமுறை
சொன்னது கூச்சமாகவே இருந்தது.
விழா முடிந்து கீழே நின்று கொண்டிருந்த என்னை நெருங்கினார் அந்தப் பெரியவர். கைகளில் பொன்னாடையும் நினைவுப்பரிசும். நான்காவது நன்றியை வாங்க நான் தயாரான போது பத்தடி தொலைவில் நின்று கொண்டு தோரணையாகக் கைச்சாடை போட்டு அழைத்தார். அருகே போனதும் அவர் கேட்ட கேள்வி,”என்னப்பா! கார் ரெடியா இருக்கா?”
எனக்குப் புரியவில்லை. சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். “அதான் தம்பி! உங்களுக்காக இறைவணக்கம் பாடியிருக்கேன்லே! வீட்டுக்குப் போக கார் கொடுங்க”. விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு வண்டியை எப்படியோ ஏற்பாடு செய்து அனுப்பினோம். அப்போது எரிச்சலாக இருந்தாலும் அவர் வீட்டுக்குப் போய் என்ன செய்திருப்பார் என்று யோசித்தேன்.
குறுகலான ஒரு வீதியைக் கடந்து அவர் வீட்டு வாசலில் கார் போய் நின்றிருக்கும்.மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்கள். ஓட்டுநரிடம் “வரேன்ப்பா!
கிருஷ்ணன் கிட்டே சொல்லீடு” என்று சத்தமாகச் சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்திருப்பார்.”கல்கி நூற்றாண்டு விழாவுக்குப் போனேனா! சுப்புடு பார்த்துட்டார். நீங்க பாடியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். பாடினேன். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நீங்க பஸ்லே போறதாவதுன்னு பிடிவாதமா கார் வைச்சு அனுப்பீட்டாங்க”என்று தோரணையாக சால்வையை
மருமகளிடம் நீட்டியிருப்பார்.
வீட்டில் சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள இந்தச் சின்ன நாடகம் அவருக்குப் பயன்பட்டிருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் அதே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சந்தித்த ஒரு பெரியவரின் ஞாபகம் வந்தது. திரு.கிருஷ்ணனை “என்னப்பா! சொல்லுப்பா” என்று தயங்கித் தயங்கி ஒருமையில் அழைப்பார். அடிக்கடி வந்து உதவிகள் பெறுவார். போகும்போது இன்னும் தயக்கமாய் “ஏம்ப்பா ! வாங்கிக்கட்டுமா? மைசூர்பா?” என்பார்.
கிருஷ்ணன் கையொப்பமிட்டுத் தரும் காகிதத்தைக் கவுண்ட்டரில் காண்பித்து ஒருகிலோ மைசூர்பா இலவசமாய் வாங்கிக் கொண்டு மெல்ல நகர்வார். வீட்டுக்குள் நுழையும்போது இவருடைய தோரணையும் மாறியிருக்கும்.
“இந்த கிருஷ்ணன் கூட ஒரே தொல்லையாப் போச்சு! வேணாம் வேணாம்னா கேக்கறதில்லை. ஒதுங்கிப் போனா கூட வம்பா கூப்பிட்டு கையில மைசூர்பாவைத் திணிச்சுடறது” என்ற செல்லச் சலிப்போடு மருமகள் கைகளில் கொடுத்திருப்பார்.
வீட்டுக்குள் சின்னச் சின்ன சலுகைகளைப் பெறவும் பெரிய மனிதர்களின் பரிந்துரைகள் தேவையாயிருக்கிறது பெரியவர்களுக்கு!!
உளிகள் நிறைந்த உலகமிது – 15
1 Comment/in 2011, Blog /by jbadminஎந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை.
![]() |
|
டேவிட் ஒகில்வி (David Ogilvy) |
இவை சமைத்துப் பாருங்கள் வகையறா புத்தகங்கள் அல்ல. விளம்பர நிபுணர் ஒருவரின் மனநிலை, வாழ்க்கைமுறை போன்ற அம்சங்களை உணர்வு ரீதியாய் உள்வாங்க உதவுகிற புத்தகங்கள் . ஒகில்வி அலுவலக சகாக்களிடம் நடந்து கொள்கிற முறை, அவர் அனுப்பிய அலுவலகக் குறிப்புகள் ஆகியவை இரண்டாவது புத்தகத்தில் இருப்பவை. எனக்கு ஒகில்வியின் எழுத்துக்கள் அகஸ்மாத்தாக அறிமுகமாயின.
ஒரு விளம்பரத்துக்கு அங்கீகாரம் தர க்ளையண்ட் முரண்டு பிடித்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பதற்கு விளையாட்டாக ஒரு கவிதையை ஒகில்வி எழுதியிருப்பார். பெரும்பாலும் விளம்பரத்தின் தரம் படைப்பாக்கத்தின் துல்லியம் போன்றவற்றை மதிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் கொண்டவை அவை.
வாடிக்கையாளர் ரொம்ப சிணுங்கினால்
அவர் நிறுவன லோகோவை இருமடங்கு பெரிதாகப் போடு
இன்னும் அவர் சமாதானமாகவில்லையா?
அவருடைய தொழிற்சாலையின் படத்தைப் போடு
மனிதர் இன்னும் முரண்டு பிடிக்கிறாரா?
வேறு வழியே இல்லையா?
சரி சரி! அவர் புகைப்படத்தைப் போட்டுத் தொலை!!
If your client groans and cries
make his logo twice the size;
If he is still refractory
put a picture of his factory;
Only in the gravest cases
should you show the client`s faces;
தன்னுடைய நிறுவனத்தில் புதிதாக சேர்பவர்களுக்கெல்லாம் ரஷ்ய பொம்மை ஒன்றைப் பரிசளிப்பார் ஒகில்வி. அந்த பொம்மையின் கழுத்தைத் திருகித் திறந்தால் அதேபோல அதனினும் சிறிய பொம்மை ஒன்று இருக்கும்.அதற்குள் அதனினும் சிறிய பொம்மை. அதற்குள் அதனினும் சிறிதாய் மற்றொரு பொம்மை. அதற்குள் ஒரு சீட்டு வைத்திருப்பார் ஓகில்வி.
“தம்மைவிட சிறியவர்களை வேலைக்கு எடுத்தால் ஒரு நிறுவனம் சித்திரக் குள்ளர்களின் கூடாரமாகிவிடும். தம்மை விடப் பெரிய திறமை வாய்ந்தவர்களை வேலைக்கு எடுத்தால் அந்த நிறுவனம் அசுரத்தனமாக வளரும்.அந்த நம்பிக்கையில்தான் உங்களை வேலைக்கு எடுத்திருக்கிறோம்”.
ஒகில்விக்கு அபாரமான நகைச்சுவையுணர்வும் உண்டு.கிறுக்குத் தனமாக யோசிப்பவர்களுக்கே புதுமையான சிந்தனைகள் தோன்றும் என்று நம்பினார். ஓ&எம் நிறுவனத்தின் ஜகார்தா கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கென் பிராடி என்ற இளைஞருக்கு 29 வயதான போது அவருக்கு ஒகில்வியிடமிருந்து வந்த வாழ்த்து வாசகங்கள் இவை:
“நீ அபாரமான இளைஞன். நம் நியூயார்க் அலுவலகத்துக்கு வா! நான் உன் கைகளைக் குலுக்க வேண்டும்”. வந்தவருக்கு ஒகில்வி சொன்ன உபதேசம் என்ன தெரியுமா?”
“இங்கே பார்! கிறுக்குத்தனத்தை மட்டும் இளமையிலிருந்தே நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், பிற்காலத்தில் அது முதுமைக்கோளாறு என்று யாரும் தவறாகப் பேச மாட்டார்கள்”.
ஒகில்வியின் மதிப்பீடுகளில் இன்றும் செல்லுபடியாகக் கூடிய விஷயம் என்று நான் கருதுவது, தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் அச்சு விளம்பரங்களுக்கும் வேண்டிய அம்சங்கள் என்று அவர் சொன்னவைதான். தொலைக்காட்சி விளம்பரத்தில் சுவாரசியம் தூக்கலாக இருக்க வேண்டும், அச்சு விளம்பரத்தில் சாமர்த்தியம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கான விளம்பரங்கள் மற்ற தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்றதைப் பார்த்திருப்பீர்கள். இது மிக முக்கியமான ஊடகப் புதுமை. போட்டியாளர்களின் கோட்டைக்குள் தங்கள் கொடியை அறிமுகம் செய்வது போலத்தான்.
அமெரிக்காவில் ஒருமுறை தொலைக்காட்சி செய்திகள் நடுவே ஒரு செய்தித்தாளின் விளம்பரம் ஒளிபரப்பானது. அந்த விளம்பரம் தொலைக்காட்சி செய்திகளையே நக்கலடித்ததுதான் சுவாரசியம்.
“இந்த செய்திகளை ஆற அமர விரிவாகப் படித்தால்தானே நல்லது. அவசரம் அவசரமாக வாசித்தால் பயனுண்டா? செய்தித்தாளில் படித்தால் அந்தப் பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவோ பயன்கள். ஆனால் ஒரு விஷயம். செய்தித்தாள்களின் பயனை தொலைக்காட்சியின் சில விநாடிகளில் சொல்லிவிட முடியுமா என்ன?. இது சாமர்த்தியமா?சுவாரசியமா? இரண்டும்தான்.
விளம்பரங்களில் இடம்பெறும் சுவாரசியமும் சாமர்த்தியமும் ஒட்டுமொத்த ஜனத்தொகைக்கும் புரியவேண்டும் என்று அவசியமா? அவசியமில்லைதான். உங்கள் இலக்குக்குட்பட்ட வாடிக்கையாளர் யாரோ அவர்களுக்குப் புரிய வேண்டியது மிகவும் அவசியம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தின் பாஷையில் அவர்களுக்கு சுவாரசியம் தருகிற விதமாக விளம்பரம் அமைந்தால் போதும்.
சமீபத்தில் ஒரு கார் விளம்பரம் பார்த்தேன்.ஒரு பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஓர் இளைஞனை அழைக்கிறாள்.
“தேடுவது?”
“அதான் நம்ம search engine இருக்கே என்று உற்சாகமாய்க் கிளம்புகிறான் இளைஞன். காரை சர்ச் என்ஜின் என்று சொல்வது இளைஞர் வட்டாரத்தில் கவனிக்கப்படும். பக்கத்து வீடு எங்கே
இருக்கிறது என்று பார்க்கவே சர்ச் என்ஜின்களை நம்பும் இந்தத் தலைமுறையின் இதயங்களில் இந்த விளம்பரம் இடம் பிடிக்கும்.
இந்த விளம்பரத்தில் சுவாரசியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் சுவாரசியமும் மிக்க விளம்பரங்கள் சந்தையில் வெல்கின்றன. பல நேரங்களில் சந்தையையே வென்றெடுக்கின்றன.
(தொடரும்…)
Copyright © 2015 Marabin Maindan. All rights reserved.
Powered by J B Soft System, Chennai.